செவ்வாய், 27 ஜூலை, 2010

அஞ்சல் - 4

அஞ்சல் – 4

01.14-2005

அன்புள்ள தோழி சிவசோதி!

இன்றைக்கு தைப்பொங்கல் நாள். இப்ப தான் பொங்கி முடிச்சேன். அம்மா சாமியறைக்கு முன்னால் படையல் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இந்த முறை அஷ்வத்தாமாவின் கையால் முதல் சிறங்கை அரிசி போட்டு பொங்கினோம். குஞ்சுக் கையில் அரிசியை அள்ளிக் கொடுத்து அவரைக் கொண்டு போட வைப்பதற்குள் உன்பாடு என்பாடாய் போய்விட்டது. ஆனால் அம்மாவுக்கு அதில் ஒரு சந்தோசம் தன்னுடைய மூத்த பேரன் கையால் இந்த வருசப் பொங்கல் பொங்குவதில்..!

ஊரில் என்றால் பொங்கல் தினம் இப்பிடியா இருக்கும்?? எத்தனை ஆரவாரமாய் விடியல் காலம்பறையே எழும்பி பொங்குவம்?? அதுவும் அப்பா அந்த ஆஸ்துமாவிலும் குளிரையும் பாராமல் பொங்குவதற்கு வந்துவிடுவாரே.. உலக்கையை வைச்சு கோலப் பொடியால் கோலம் போடுவதும், கரும்பு, மஞ்சள் குருத்து என்று அலங்காரம் பண்ணுறதும், அயலட்டையில் எங்கட பொங்கல் தான் முதல் பொங்கலா இருக்க வேண்டுமென்ற போட்டியில் வெடி கொளுத்தி அடையாளம் காட்டுறதும் எண்டு ..பொங்கலென்றால் ஒரு சந்தோஷம் தான் என்ன??

அத்தினை சந்தோஷமும் இப்ப எந்த திக்கில் போனதெண்டு தெரியேலை. அங்க எழும்பிற மாதிரி தான் இங்கயும் விடியல் காலை 4 மணிக்கு எழும்பி, குளிச்சு முழுகி பொங்குறம் நானும் அம்மாவும் . ஆனாலும்..இங்க பொங்குற பொங்கல் பொங்கல் என்ற அந்த முழுமையான உணர்வை தருவதேயில்லை. முற்றத்துப் பொங்கலுக்கோ, வாசல் கோலத்துக்கோ இடமில்லை இங்க..இந்த கொட்டுற பனியில! மண் பானையோ, கரும்புக் கதியாலோ, மஞ்சள் இலை, வாழை குருத்து, தென்னம் பாளை , பட்டாசு வெடி எண்டு எதுவுமே இல்லாமல் பொங்குறது ஒரு பொங்கலே..?? :(

எந்த ஆரவாரமும், சிரிப்பும் , கலகலப்பும் இல்லாத பொங்கல் நாள் என்ற கடனுக்காக பொங்குறம் இங்க.. ஏதோ அனாதையள் மாதிரி உணர்வு தான் மேலோங்குது..!

யோசிச்சுப் பார்த்தால் அஷ்வத்தாமாவுக்கு எல்லாம் எங்கட ஊர் , மொழி, இனம் என்ற எந்த உணர்வும் வராது..அவர் வளர்ந்து வரும் நாட்களில் என்று நினைக்கிறன். அந்த உணர்வு அவருக்கு இருக்க வேண்டுமென்று நான் விரும்பினாலும் கூட முன்ன பின்ன தெரியாத ஒன்றைப் பற்றி அவருக்கு எப்படி பற்றுதல் வரும்?? நாங்களாக கதை கதையா சொன்னால் கூட இயற்கையா வரும் பற்றுதல் அவருக்கும் வருமா என்று எனக்கு சந்தேகமாகத் தான் இருக்கு.

ஆனாலும் என்னுடைய கடமையாக நான் நினைக்கிறது அவருக்கு தமிழ் படிப்பிக்கிறதும், எங்கட தமிழ் பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுப்பதும், நாங்கள் ஊரில் என்னென்ன கொண்டாடினோமோ அதெல்லாம் அவரோடு சேர்ந்து இங்கும் கொண்டாடவேண்டுமென்பதும் தான். பார்ப்பம்....இது எதுவரை சாத்தியமாகுதெண்டு!!

நல்ல ஒரு இனிமையான காலை நேரம் இப்போது. வெளியில் நிறைய பனி பெய்து முற்றமெல்லாம் வெள்ளை வெளேரென்று மின்னிக்கொண்டிருக்கிறதைப் பார்க்க நல்ல வடிவா இருக்கு. குளிருக்கு எத்தனை தான் ஹீட்டர் போட்டாலும் சுட சுட ஒரு கோப்பியை எடுத்து வந்து கொஞ்சம் கொஞ்சமா ஊதி ஊதிக் குடிப்பதைப் போல ஒரு ஆத்ம திருப்தி எனக்கு வேறு எதிலும் கிடைப்பதில்லை. நான் ஒரு காபி அடிக்டட்!

ஒரு கப் கோப்பியோடு வந்து இருந்துவிட்டேன் உனக்கு கடிதம் எழுத. வாசல்கதவிலிருக்கும் கண்ணாடி வழியாக வெளியில் பெய்து கொண்டிருக்கும் பனியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அஷ்வத்தாமா. அவருக்கு இது இரண்டாவது பனிக்காலம். முதல் பனிக்காலத்த்தின் போது அவர் பிறந்து மூன்று நாலு மாசம் தான். அதனால் இந்த பனி அவருக்கு புதுசும் புதினமுமாயிருக்கு. புதுமையாயும் இருக்கும் போல.. என்ன இப்பிடி வானத்தில இருந்து வெள்ளை வெள்ளையாய் கொட்டுது எண்டு யோசிக்கிறாரோ என்னமோ?? அத்தனை ஆர்வமாய் பார்த்துக் கொண்டு நிற்கிறார். தன் பாட்டுக்கு பனியைப் பார்த்து சந்தோஷக் கூச்சலும் குதியலுமாய் என்னமோ தன்னுடைய பாஷையில் பேசிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு அனுபவிக்கிறார்.

கடும் குளிர் என்பதால் ஆளை மூடிக் கட்டி விட்டிருக்கிறன். போன கிழமை இந்த கடுங்குளிரால் பிள்ளைக்கு காய்ச்சல் கீய்ச்சல் வந்திடுமோ என்ற பயத்தில் ஹீட்டரை நல்ல உச்சத்தில் போட்டுவிட்டேன்..கொஞ்ச நேரத்தில் பார்த்தால் பிள்ளையின் மூக்கிலிருந்து இரத்தம் வரத் தொடங்கிட்டுது, எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போட்டுது. 911 க்கு போன் போட்டு அம்புலன்ஸை கூப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எனக்கு மயக்கம் வந்திட்டுது. வந்த ஆம்புலன்ஸ்காரன் பிள்ளையை கொண்டு போறதா அல்லது அம்மாவை கொண்டு போறதா எண்டு நக்கல் அடிச்சான்.

அதுக்கு பிறகு ஹீட்டரை உச்சத்தில் போடுவதில்லை. பிள்ளைக்கு தான் குளிர் உடுப்புகளை போட்டுவிடுறது. ஆனால் அஷ்வத்தாமாவுக்கு கம்பளி உடுப்புகள் விருப்பமில்லை. கழற்றி விடச் சொல்லி ஒரே அடம்..! குடு குடு என்று ஒரு இடத்தில் இராமல் வீட்டுக்குள்ளேயே பிரகாரத்தை சுற்றுவது போல் ஓடிக் கொண்டிருக்கிறார். களைப்பெண்டு எதுவும் வராதா?? ஒரு இடத்தில் வந்து இருக்கமாட்டாரா எண்டு நானும் பாக்கிறன் இவர் நடக்கப் பழகின நாள் முதல் கொண்டு..ம்ஹூம்!

பொம்பிள்ளை பிள்ளை தான் வேண்டுமென்று ஆசைப்பட்டார் என்னுடைய பிராணநாதர். ஆனால் அஷ்வத்தாமா தான் பிறப்பார் என்று பந்தயம் கட்டினேன். பந்தயத்தில் வெற்றி பெற்றது நானென்றாலும் இப்ப அப்பாவும் மகனும் அத்தனை வாரப்பாடு. வேலையால் தகப்பன் வந்ததும் ஓடிப் போய் தகப்பனின் மடியில் ஏறிக் குந்திவிடுவார் மகனார். சோறு சாப்பிட தொடங்கின நாளிலிருந்து உறைப்பு புளிப்பு எல்லாம் சப்புக் கொட்டி சாப்பிடுவார். என்ர மனுசனுக்கு சமைக்கிறதில் நல்ல ஈடுபாடு எங்கட அப்பா மாதிரி. தகப்பனார் சமைக்க போனால் கடுகு , சீரகம், வெந்தயம் தாளிக்கும் போது தான் தான் அதுகளை போட வேண்டுமென்பது அஷ்வத்தாமாவின் அடம். அப்ப அவரின் கையில் இரண்டு மிளகு அல்லது கொஞ்சூன்ண்டு கடுகு, சீரகம் குடுக்க வேண்டும். நெருப்புக்கு பயம்..அதால அப்பா தூக்கி வைச்சிருக்க தூர நின்று எறிவார்..

யார் இண்டைக்கு குக் பண்ணினது என்று கேட்டால் “பேபி” என்று தன்ர நெஞ்சைத் தொட்டு சொல்வார்.

தகப்பன் நிற்கும் நேரங்களில் தகப்பனோடு தான் நித்திரை கொள்வார். தகப்பன் மகனுக்கென்று ஒரு தாலாட்டுப் பாட்டு வைச்சிருக்கிறார். கேட்டால் சிரிப்பு வரும். அது அவரே இயற்றினதாம். தன்ர மகனுக்கு மட்டும் தானாம்ச பாட்டெழுதுற எனக்கே பாடிக் காட்டினம் அப்பரும் மகனும்.. எந்த சுவரில் கொண்டு போய் தலையை முட்டுவது என்று எனக்கு விளங்கேலை.

தகப்பனும் மகனும் நித்திரை கொள்ளேக்கில படம் எடுத்தனான்.. அதுல ஒரு பிரதி உனக்கும் இங்க வைச்சிருக்கிறன் ..இந்த கடிதக் கவருக்குள்ளசபார்.. நீ அதை பார்க்கேக்கில அஷ்வத்தாமாவுக்கே பிள்ளை பிறந்திடுமோ யானறியேன் பராபரமேசJJ இந்தப் படம் அஷ்வத்தாமா பிறந்த கொஞ்ச நாளில் ஒரு மாதத்துக்குள் எடுத்த படம்..!

எப்பிடி இருக்கிறார் பார்த்தியா?? ஒர் பூக் கூடை மாதிரி இருக்குமடி அவரை தூக்கேக்கில.

குழந்தை என்றால் முகம் சுளிச்ச நான் இப்ப கீழ விடாமல் மடியிலேயே தூக்கி வைச்சிருக்கிறன்சஅது என்னமோ இந்தக் குழந்தையள் சரியான மாயக்காரர்கள். சிரிக்கிறாதும், அவையட பாஷையில ஊஉல்லூல்ல்ல் ஊவ்வ் என்று கதைக்கிறதும்..கொஞ்சுறதும் கடவுள் கூட இப்பிடி வடிவான பிறப்பாயோ அதிசயமாயோ இருக்கமாட்டார் .. அழுகை வரேக்கில வாய் வெம்புற பரிதாபத்தைப் பார்த்தால் எங்களுக்கு நாங்களே கொடுமைக்காரர் மாதிரி தெரியுது.

அதே நேரம் இந்தக் குழந்தையள் சரியான தற்கொலப்படை சாதியடி! சாப்பாட்டைத் தவிர வேற என்ன கையில் கிடைத்தாலும் அதை ஒருக்கால் வாயில் வைச்சு பார்க்க வேண்டும். எங்கட கண்ணுக்கு தெரியாத துகளுகளை கூட தவண்டு தவண்டு போய் எடுத்து லபகெண்டு வாயில வைச்சு சப்பிறதும், ருசி சரியில்லையெண்ட்டால் முகம் கோணுறதும்..அச்சோசஅச்சோச!

அப்பிடி போகுது அவருடைய புராணம்..!

நானும் என்னவோ உனக்கு புதினம் சொல்வது போல் குழந்தையை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறன். உனக்கும் இதே அனுபவங்கள் எப்பவோ வாய்த்திருக்கும், உன்னுடைய குழந்தைகளும் இதே மாதிரி தானே விளையாட்டுக் காட்டியிருப்பினம்??

நானும் அம்மாவும் உன்னைப் பற்றி கதைச்சால் அடிக்கடி உனக்கு பிள்ளைகள் இருக்கும். அதுவும் பொம்பிள்ளை பிள்ளை என்றால் சிவசோதி மாதிரியே சுருள் முடியாய், வடிவாய் இருக்கும் என்ன என்று அம்மா கேட்பாசநானும் கற்பனை பண்ணி பண்ணி பார்ப்பேன்..உன்னுடைய பிள்ளைகள் எப்படி இருப்பினம் உன்னைப் போல இருப்பினமா அல்லது உனது கணவரைப் போல இருப்பினமா எண்டு அடிக்கடி யோசிப்பேன், முகம் தெரியாத உன்னுடைய கணவரை கற்பனையில் எப்படி பார்ப்பது ?? அந்த முயற்சியில் எனக்கு எப்பவும் தோல்வி தான். .

எப்ப உன்னை சந்திப்பனோ? எப்ப உன்னுடைய குடும்பத்தைப் பார்க்கப் போறேனோ என்ற ஏக்கத்தை விட பார்க்க முடியுமா என்ற சந்திப்பேனா என்ற கேள்வியின் தாக்கத்திலேயே ஒவ்வொரு தடவையும் உள்ளுக்குள் நொருங்கி தூள் தூளாகிறேன். அந்த துகள்களை கவனமாக பொறுக்கி எடுத்து பிறகு நானே எப்பிடியும் சந்திக்கலாம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் குழைத்து திரும்பவும் மண்பொம்மை ஒன்றை உருவாக்கி வைக்கிறேன் எனக்குள். இது எனக்கு வாடிக்கையாகிப் போய்விட்டதடி..!

வேறு என்ன விசயம்?? இப்ப கொஞ்ச நாளா எனக்கு கண்டறியா வயித்துவலி ஒண்டு தொடங்கியிருக்கு,, முதலில் சும்மா வலியாக்குமெண்டு அசட்டையா இருந்தேன். ஆனால் இப்ப அது எந்த வலி போக்கும் மாத்திரைக்கும் அடங்க மாட்டன் எண்டுது.. நாளை அல்லது நாளண்டைக்கு ஒருக்கால் எமர்ஜென்ஸி போய்ப் பார்க்க வேணும்..!

மிகுதியை அடுத்த கடிதத்தில் எழுதுறன்.


"Each friend represents a world in us, a world possibly not born until they arrive, and it is only by this meeting that a new world is born."
- Anais Nin


இப்படிக்கு

அன்பு மறவாத தோழி

சாந்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக