வெள்ளி, 23 ஜூலை, 2010

அஞ்சல்- 3

01.10.2005
01.10.2005
அன்புள்ள சிவசோதிக்கு!

நலமாக இருக்கிறாயா??

நேற்றைக்கு என்னுடைய அம்மாவின் பிறந்த நாள். இன்றைக்கு என்னுடைய மருமகனாரின் ஹோம் கம்மிங்.. என்ன யோசிக்கிறாய்?? இந்த மாதம் (தை மாதம்) 7ம் திகதி பாலாவுக்கும் பிரேமாவுக்கும் ஆண்குழந்தை பிறந்திருக்கிறார். சிசேரியன் தான் இவரும். குழந்தையை இன்றைக்கு தான் ஆசுபத்திரியிலிருந்து வீட்டுக் கொண்டு வரப் போறம். அதான் அவரை வரவேற்க அவருடைய அறையை அலங்காரம் செய்து வைச்சுட்டு, ஆலத்தியும் ஆயத்தப்படுத்திவிட்டு வந்து இந்த கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன்.

பிள்ளைக்கு நிஹாஷன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் என்னிடம் கேட்காதே.. அது பிரேமாவின் தங்கைமார் தேர்வு செய்தது. என்னிடம் கேட்டார்கள் . நான் புராணம் , இதிகாசமெல்லாம் தேடி , ஒரு பட்டியல் போட்டு குடுத்தேன். ஆனால் ஸ்டைலிஷான பெயராக இல்லை அவை என்பதால் நிஹாஷன் என்ற இந்தப் பெயரை பிரேமா தேர்வு செய்திருக்கிறா. பிள்ளையை பெற்றவர் என்ற வகையில் பிரேமாவுக்கு தான் முன்னுரிமை அதனால் இதில் எந்த விமர்சனமும் எனக்கு இல்லை. ஏன் என்றால் இதே கதை தான் என் விசயத்திலும் நடந்தது,

நான் பல வருசக் கணக்காகவே மனதுக்குள் உருப்போட்டு வைத்திருந்த பெயர் அஷ்வத்தாமா! எனக்கு அந்த கதாபாத்திரத்திலும் சரி, அந்த பெயரின் அர்த்தத்திலும் சரி அத்தனை ஈர்ப்பு. ஆம்பிள்ளைப் பிள்ளை எனக்குப் பிறந்தால் அஷ்வத்தாமா தான் பெயர். இரண்டாவதாய் இன்னொரு பெயர் நான் தேர்வு செய்து வைக்கவே இல்லை. என்னுடைய பிராணநாதருக்கு மஹாபாரதமென்றால் 5 சகோதரர்களும் சேர்ந்து 100 ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் போட்ட சண்டை என்ற அவுட்லைன் மட்டும் தான் தெரியும்,. மஹாபாரதத்தின் கிளைக்கதைகள் எதுவும் தெரியாத வெள்ளந்தி. :):) அவர் அஷ்வத்தாமா என்ற பெயரைச் சொன்னதும் மிரண்டு போனார்..

அமெரிக்காகாரனுக்கு கம்பியூட்டரில் நிரப்ப இலகுவாக இருக்க வேண்டுமென்பதற்காக எங்கட ஆட்கள் பிள்ளைகளின் பெயரை 4 அல்லது 5 எழுத்துகளுக்குள் வாற மாதிரி தான் வைக்க விரும்புவினம்.

அப்ப என்ர மனுசனும் முதலில் உந்தப் பெயரை இங்கத்த சனங்களால உச்சரிக்க முடியாது..எதுக்கு இந்த கிழட்டு பெயர் அது இது எண்டு முரண்டு பண்னினார். நான் எதையும் காதில் போடவில்லையே. பேர் வைச்சது வைச்சது தான். வயிற்றில் என்ன பிள்ளை என்று ஸ்கான் பண்ண முன்னமே அது அஷ்வத்தாமா தான் வந்திருக்கிறார் என்று சொல்லிவிட்டே னே . பிள்ளை உதைக்கிற நேரமெல்லாம் அஷ்வத்தாமா குளப்படி செய்யக் கூடாது.. என்றெல்லாம் பிள்ளையோடயே கதைச்ச எனக்கு மற்றவை சொல்லினம் எண்டு பேரை மாத்துவனா என்ன??

தேவன் என்னோடு பந்தயம் கூட கட்டினவர் முதல் பிள்ளை பொம்பிள்ளைப் பிள்ளை தானென்று. பிள்ளைக்கு சட்டைகள் தைப்பதற்கு கூட பிங் கலரில் தான் துணி மணி எல்லாம் வாங்குவார்.. நான் தான் சண்டை பிடிச்சு நீல நிறத்தில் வாங்கினேன். ::):) பாவம் தேவனுக்கு பொம்பிள்ளைப் பிள்ளை தான் விருப்பம். ..!

பிள்ளை பிறந்த பிறகு அவருடைய சொந்தக்காரர் பிள்ளைக்கு என்ன பெயர் வைச்சனீர் என்று என்ர பிராணநாதரை கேட்டால் “அது என்னமோ அருச்சுனனுக்கு வில்வித்தை சொல்லிக் குடுத்த மாஸ்டர் துரோணராம். அவரிண்ட மகன் பெயராம் அஷ்வத்தாமாவாம் எண்டு கொஞ்ச நாளா வியாக்கியானம் பாடிக் கொண்டிருந்தார். அஷ்வத்தாமா எண்டு கூப்பிட கஷ்டம் எண்டு பேபி எண்டு செல்லப் பெயர் வைச்சு கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இப்ப...

பெடியன் வளர்ந்து உந்தப் பெயரை மாத்தி வைக்காட்டில் என்ர பேரை நான் மாத்தி வைக்கிறன் என்று பாலா நக்கல் அடிக்கிறார்.

ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு அஷ்வத்தாமா என்றால் யார் என்று சொல்லி, அந்த பெயரின் அர்த்தத்தையும் விளக்கப்படுத்தினால் என்ர பிள்ளை பெருமைப்படுவாரே தவிர அயர்ச்சியடையமாட்டார் என்று..

இப்ப பிரேமாவுக்கும் என்னுடைய நிலை தான், என்னவோ எல்லாரும் தங்கட பிள்ளைகளுக்கு ஏதோ அர்த்தமா வைச்சது போலவும், காரண காரியங்களோட தான் பிள்ளைகளுக்கு அவை பெயர் வைச்சது மாதிரியும் பிரேமாவிண்டம் “நிகாஷனோ?? அதென்ன புதுசா விண்ணானமா ஒரு பேர்?? என்ன அர்த்தம் உந்தப் பேருக்கு?” என்று கேள்வியள் வேற.. உந்தப் பேரை சரிக்கட்ட அவள் எத்தனை முனை போராட்டம் எடுத்திருப்பாள் எண்டு அவளுக்கு தான் தெரியும். பிள்ளை பிறந்த நேரக் குறிப்பை வைச்சு ந, நி வரிசையில் பெயர் தொடங்க வேண்டும், எண் சாத்திரப்படி 7ம் நம்பருக்குள் கூட்டி வர வேணும். ஸ்டைலா மொடர்னா இருக்க வேண்டு ம்...இதெல்லாம் பார்த்து முடிச்சால்...அர்த்தமாவது ஒன்றாவது..! :):)

எனக்கு சாத்திரம், குறிப்பு, எண் சோதிடம் எதிலும் நம்பிக்கையில்லை; அக்கறையுமில்லை; பெயர் நல்ல பெயராக இருக்க வேண்டும். எனக்குப் பிடிச்ச பெயராக இருக்க வேண்டும். அவ்வளவு தான்!! அதே போல பிரேமாவுக்கு தன்ர பிள்ளையின் பெயர் ஸ்டைலா இருக்க வேண்டும் எல்லா சாத்திரங்களோடயும் பொருந்தி வாறமாதிரி இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி..எந்த மாதிரியா இருந்தாலும் ஒரு பிள்ளையின் பெயரை தேர்வு செய்யும் முழு உரிமையும் அந்த பிள்ளையின் தாய்க்கு தான் இருக்கு.. மற்றவர்களை விட தாய் தான் அதிகமாக தன் பிள்ளையை பெயர் சொல்லி கூப்பிடப் போகிறாள். தங்கம், செல்லம், முத்து , பவளம் எண்டு சொந்த பெயரோடு ஆயிரமாயிரம் செல்லப் பேர் வைத்து அந்தக் குழந்தையை தாயைப் போல வேற யார் கொஞ்சப் போகினம்?? அதனால் பிரேமாவின் உரிமையில் தலையிடவோ, குறை சொல்லவோ நான் தயாராக இல்லை.

எப்படியோ எனக்கு மூத்த மருமகன் பிறந்து இன்றைக்கு வீட்டுக்கு வாறார். எங்கட குடும்பமும் பெரிதாகி, புது புது உறவுகளின் வருகையோடு இன்னொரு சந்ததி தொடங்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கும் போது மனதுக்கு கொஞ்சம் சந்தோசமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் பார்த்து சந்தோசப்பட அப்பாவும் , அம்மம்மாவும் இல்லையென்ற கவலையும் கூடவே வருகிறது.

உனக்கு எத்தனி பிள்ளைகளடி? அவர்களுக்கு என்னென்ன பெயர்? எத்தனை ஆம்பிள்ளைப் பிள்ளை? எத்தனி பொம்பிள்ளைப் பிள்ளை ? இதெல்லாம் அறிய ஆவலாய் இருக்கிறது..ஆனால் அறியும் வழி தான் புலப்படவில்லை. :(
வாழ்க்கையில் எத்தனையோ நல்ல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் அனுபவிக்க இயலாமல் இந்த புலம்பெயர்வு அமைந்திருக்கிறது என்று எனக்கு இப்ப தான் உறைக்கிறது. ஊரில் என்றால் எல்லா உறவுகளும் சுற்றமாக கிட்டக் கிட்டவா இருந்தம். இப்ப திக்குக்கு ஒன்றாய் தேசத்துக்கு ஒன்றாய் சிதறிப் போயிருக்கிறோம். நான் தூக்கி வளர்த்து, ஒவ்வொரு கணமும் கொஞ்சி கொஞ்சி விளையாட வேண்டிய உன்னுடைய பிள்ளைகளையோ வசந்தாக்கா, குமா அண்ணாவின் பிள்ளைகளையோ என்னாலும் நீங்கள் எல்லாரும் இருந்து சீராட்டி , தாலாட்டி , சீர் செய்து முறை செய்து பார்க்க வேண்டிய என் பிள்ளையை உங்களில் யாருக்கும் கூட நேரில் பார்க்க முடியாத அவலத்தை பார்.. ஏன் இப்பிடி ஒரு வரம் வாங்கி வந்தனாங்களோ ..தெரியேலை.. :(

சரி.. இண்டைக்கு இவ்வளவும் போதும்.. இன்னும் மருமகனாரை காணவில்லை. என்ன விசயமென்று ஒருக்கா போன் பண்ணி பார்ப்பம்.. வேற என்னடி?? மிச்சத்தை அடுத்த கடிதத்தில் தொடருறேன்

. "A hug is worth a thousand words. A friend is worth more."


இங்ஙனம்

அன்புமறவாத தோழி

சாந்தா.


. .


1 கருத்து:

  1. I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    பதிலளிநீக்கு