திங்கள், 6 செப்டம்பர், 2010

அஞ்சல் - 5.

02.06.2010

அன்பு மறவாத சிவசோதிக்கு!

நீ நலமாயிருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன் தான் இம் மடலையும் எழுதத் தொடங்குகின்றேன். நான் நலம் என்று இனிமேல் எப்ப எழுத முடியுமென்று எனக்கு தெரியவில்லை. இப்போதைக்கு என்னிடம் அந்த வாசகத்திற்கு அர்த்தமில்லை என்று வைத்துக் கொள்வோம். :):) வேற என்ன..வழமை போல் எனக்கு ஏதாவது உடம்புக்கு ஏதாவது ் வந்திருக்குமென்று இந்தக் கடிதத்தை வாசிக்கும் போஒது நீ நினைப்பாய் என்று என்னால் இப்போதே உணரமுடிகிறது...

நீ நினைப்பதும் சரி தான்..நான் எப்ப தான் நோயில்லாமல் இருந்திருக்கிறன்?? பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே இப்படித் தானே...ஒரு மாசத்தில் இரு தடவையாவது ஏதாவது ஆகாமல் நான் இருந்தேன் என்றால் ஆச்சரியம் தான்..என்ன?? :):) நான் வாங்கி வந்த வரங்களில் அதுவும் ஒன்று தானே?? :):)

வாழ்கை வயதுகளை விழுங்க விழுங்க நோய்வாய்படலின் தகுதிகளும் தாக்கங்களும் அதிகரித்துக் கொண்டு தான் போகின்றன. தடிமன், காய்ச்சல், ஆஸ்துமா விலிருந்து தொடங்கிய என் நோய்வாய்ப்படல்...அப்பாவின் மறைவுக்கு பின் மன அழுத்தம் என்று ஒரு புதிய புதினமான சொல்லாடலோடு என்னை வந்து ஒட்டிக் கொண்டது. இங்கே துக்கத்தில் அழுவதை கூட மனநோயாக்கிவிடுகிறார்கள். கவுன்ஸிலிங் போ, தெரபியை பார் என்று ஆலோசனைகளும் அப்பாயிண்ட்மெண்டுமாய்..... இவர்கள் சொல்வதைப் பார்த்தால் எங்கட இனத்தில இருக்கிற அத்தனை பெண்களும் இவர்களுடைய மனநோயகத்தில் தான் இருக்க வேண்டும் போலகிடக்கு... :):)

இப்ப கொஞ்ச நாளா கண்டறியாத வயிற்று வலியொன்று வந்திருக்கு. எந்த வலியெண்டாலும் எனக்கு கை குடுக்கிறது இங்க தைலனோல் என்ற மருந்துக் குளிசை தான். யாழ்ப்பாணத்து பனடோல் மாதிரி. டிஸ்பிரின், அஸ்பிரின் எதுவும் எனக்கு சரி வருதில்லை. அவற்றை பாவித்தால் ஒவ்வாமை நோய் வந்துவிடுகிறது. முகமெல்லாம் தடிச்சு, சிவந்து, கடிக்கத்தொடங்கிவிடுகிறது.

இப்ப வந்திருக்கிற இந்த வயிற்றுவலி கொஞ்சம் வித்தியாசமா தான் தெரியுது. மாத்திரைகளுக்கு அவ்வளவு லேசில் ஆறமாட்டேன் எண்டு அடம் பிடிக்குது. குளிசை போட்டால் கூட கன நேரம் தாக்குப் பிடிக்குதில்லை. இங்க ஆஸ்பத்திரிக்கு போகவும் எனக்கு மனமில்லை. அங்க போனாலும் இதே தைலனோலை தான் தந்து அனுப்பிவிட்டு பின்னால ஆயிரக் கணக்கில் பில் அனுப்புவாங்கள்.


நல்ல வேளை இந்த வயிற்று வலியை பாராமல் என்ர மகனின் பிறந்த நாள் பார்ட்டியையும், பிரேமாவின் பேபி ஷவரையும் ஒரு மாதிரி செய்து முடிச்சன். அரும்பட்டு நேரத்தில் ..இல்லாட்டில் தை மாதம் 25ம் திகதி பிறக்க வேண்டிய பிள்ளை 7ம் திகதியே பிறந்திட்டார் பிரேமாவுக்கு, நல்ல வேளை நான் 2ம் திகதியே பார்ட்டியை ஒரு மாதிரி செய்து முடிச்சிட்டன். அண்டைக்கு தான் உந்த வயிற்று வலி உக்கிரமாயிருந்தது, என்ன செய்தும் கேட்கேலை...!

நானும் அதுக்குப் பிறகு மருமகனாரின் வருகையிலும், வந்த கையோடு புது வீட்டுக்கு அவை குடி போன மனக் கஷ்டத்திலும், பொங்கல்,...அது இது என்று வந்ததில் கொஞ்சம் அலட்சியமாகவும் , நிறைய வலியை சகித்துக் கொள்(ல்)வதுமாய் இருந்துவிட்டேன்... ஆனால் இப்ப ஒரு கிழமையாய் முடியாமல் போக எமர்ஜென்ஸிக்கு இழுத்துக் கொண்டு போய்ட்டார் என்னவர். அதன் பலனாக தொடர்ந்து டாக்டர் அப்பாயின் மெண்ட் , ஸ்கேனிங் அது இது எண்டு எல்லாம் செய்து முடிச்ச பின்னால ஒரு சந்தோஷமான செய்தியும் கூடவே கெட்ட செய்தியாயும் சினிமா டாக்டர் சொல்வது போல் சொல்லிட்டினம். சந்தோசமான செய்தி இரண்டாவது தடவையாக நான் தாயாகியிருக்கிறேன். கெட்ட செய்தி எண்டால் குழந்தையோடு சேர்ந்து பலோப்பியன் குழாயில் சிஸ் வளருதாம்...! :(:( இப்ப அது தான் எனக்கு நெஞ்சிடி!

அஷ்வத்தாமா ஒருவரே போதுமென்று தான் மனதுக்குள் விருப்பமிருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த நாங்கள் எதுவும் முனையவில்லை ..காரணம் தேவனுக்கு பொம்பிள்ளைப் பிள்ளை ஆசையிருந்ததால் ..he is the baker; I’m only the oven.. But we don’t know who decide the cake type. :):) எப்படியோ இன்னொரு பிள்ளை உருவா(க்)கியாச்சு..! பலோப்பியன் குழாயில் கட்டி உருவாகியிருப்பதால் குழந்தைக்கு ஆபத்து வருமோ என்ற பயம் ஒரு புறம். இந்தக் கட்டியின் வளர்ச்சி புற்றுநோய்க்கு அறிகுறியோ என்ற நடுக்கம் இன்னொரு புறம். இப்பாடியொரு இக்கட்டான சூழ்நிலையில் என் வாழ்கையும், ஆயுளும் இப்போது எனக்கு முன்னால் பெரியதொரு கேள்விக்குறியாகவே இருக்கிறது!

டொக்டர் உள்பட எத்தனை தான் எல்லாரும் பயப்பிட வேண்டாமென்று சொன்னாலும் , இவர்களுடைய மருத்துவ விளக்கங்களும் விண்ணானங்களும் எனக்கு அடிமுடி விளங்காததாலும் எதுவும் என்னுடைய கவலையை தீர்க்கக் கூடிய வல்லமையோடில்லை. சினிமா படங்களில் வரும் கான்ஸர் கதாநாயகன்களும், கதாநாயகிகளும் தான் மனக்கண்ணில் வந்து வந்து போகினம்.

அதொண்டுமில்லை;; சிஸ் வேற டியூமர் வேற..பயப்பிடாதை என்று தேவன் சொன்னால் ஆத்திரம் வருது; என்னை சமாதானப்படுத்த பொய் சொல்லுறாரா அல்லது நான் செத்துப் போனால் பரவாயில்லை என்று நினைக்கிறாரா என்றெல்லாம் விபரீதமான சந்தேகமெல்லாம் வருது. :/

இந்தக் கட்டியை இப்பவே அகற்றினால் கருவாயிருக்கும் பிள்ளையை அழித்துவிடுவினம். இந்தக் கட்டியை நீக்குவதென்றால் பலோப்பியன் குழாயையும் வெட்டி விடுவார்களெனிலலினியொரு குழந்தைக்கு வழியில்லை..ஆக இப்போது ஒருவாகியிருக்கும் இந்தக் குழந்தையை நான் எப்படியாவது பெற்றெடுக்கத் தான் வேண்டும். எனக்குள்ள வளருகிற என்ர பிள்ளையை கொன்று எனக்கு உயிர் கொடுக்க வேணுமே சொல்லு பார்ப்பம்??

கட்டியை அகற்றும் பட்சத்தில் இந்தக் குழந்தையை அழிக்க வேணுமென்ற்ல் கடைசிவரை பிள்ளை பிறக்கும் வரை கட்டியை அகற்றுவதில்லை என்று முடிவோடு தான் நாளைக்கு கிளினிக் போய் டொக்டரிடம் சொல்லப் போறேன். அநேகமாக குழந்தையையும், கட்டியையும் சேர்த்தே 9 மாசம் வயிற்றில் வளர்க்கப் போகிறேன் என்று தான் நினைக்கிறேன். அது தான் என்னுடைய பயமும் கூட...!

இந்தப் பிள்ளை பிறக்கும் வரைக்கோ அல்லது பிறந்த பிறகோ எனக்கு ஏதும் ஆகாமல் இருக்க வேண்டுமென்பது அடுத்த என்னுடைய கவலை. எனக்கொன்று ஆச்சென்றால் பாவம் இந்தப் பிள்ளையை தாயை தின்னி என்று எங்கட குடும்பத்தார் பழி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் இருந்து என்ர பிள்ளைகளை கவனிக்கிறது போல வேற யாரும் பாப்பினமே என்ற கேள்வி இன்னொரு பெரிய கவலை..! பெற்ற பிள்ளைக்காகவும், பிறக்கப் போகும் பிள்ளைக்காகவும் கவலைப்படுவதா அல்லது மரண பயத்திலிருக்கும் என்னை பார்த்து நானே கவலைப்படுறதா எண்டு எனக்கு விளங்கேலை.. !

வீணாக கவலைப்படுறன் என்று அறிவு சொன்னாலும் மனது அதை கேட்க தயாராயில்லை. இப்ப தான் விளங்குது மனுசருக்கு சாவு திகதி தெரியாமல் இருப்பது எத்தனை நல்ல விசயமெண்டு. ஒரு மனுசன் தன்னுடைய மரணத்துக்காக தானே அழும் கேவலமும் பரிதாபமும் போல் வேற எதுவுமிருக்காது சிவசோதி. இதை என்ர சொந்த அனுபவத்தில உனக்கு எழுதிறன்.

அழுவதே கேவலம்; அதை விட செத்துவிடுவோமோ என்ற பயத்தில் , சுய இரக்கத்தில் கவலைப்படுதையும் கண்ணீர் விடுவதையும் மிக மிக கேவலமாக உணர்கிறேன்.. அந்த உணர்வில் தான் என்னுடைய பயங்களையெல்லாம் அப்படியே இந்தக் கடிதத்தில் கொட்டிவிட்டிருக்கிறேன். கவலை தீர்ந்ததா இல்லையாவெண்டு எனக்கு விளங்கேலையடி...ஆனால் என்னவோ ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைச்ச மாதிரியிருக்கு.

எப்படியோ இந்தச் சூழ்நிலையில் எனக்கு என்ன நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி ..அதை நீ அறியப் போகும் விதியிருந்தால் எல்லாம் முடிந்திருக்கும் ....ஒன்று நான் அல்லது எனது கட்டி..!

வேறு என்ன ?? மிச்ச விசயத்தை நாளைக்கு டொக்டரிடம் போய் வந்த பின் என்னுடைய மனநிலையைப் பொறுத்து ஆறுதலாக (முடிந்தால்) கடிதம் எழுதுவன்.

குள்ளே வளரும் கட்டி..!
என்ன ??

"A real friend is one who walks in when the rest of the world walks out."

இங்ஙனம்
அன்புடன்
சாந்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக