02-3-2005
அஞ்சல்- 6
அன்பு மறவாத தோழிக்கு!
நீயும் , உன்னை சார்ந்தவர்களும் நலமாக
இருக்கிறீர்களா? இப்போதெல்லாம் கடவுளை வேண்டுகிறேன் என்றோ , பிராத்திக்கிறேனென்றோ சொல்வதில் எனக்கு விருப்பமில்லை; அப்படியே சிலரிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது மனதுக்குள் குற்ற உணர்ச்சி தான் மேலோங்குகிறது. கடவுள் மீதான நம்பிக்கை மெல்ல மெல்ல கரைந்து போய் கிட்டத்தட்ட 20 வருடங்களாகிறது..! நம்பாத கடவுளிடம் எப்படி பிராத்தனை வைப்பது?? பிராத்தனை விட்டுப் போன பின் ஒருவரின் நலனுக்காக பிராத்திக்கிறேன் என்று எப்படி பொய் சொல்வது??
எனக்கு என்ன வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அல்லது விரும்புகிறேனோ எனக்கு என்ன வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அதை நானே போராடிப் பெற்றுக் கொள்ளப் பழகிவிட்டேன். போராடியும் கிடைக்கவில்லையென்றால் கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரும் முனைப்புக்கு நான் தயாராக இருக்கிறேன்.என்னைச் சார்ந்தவர்கள் அல்லது நான் சார்ந்திருப்பவர்கள் எல்லோரும் நல்லா இருக்க வேன்ண்டுமென்ற முனைப்பான விருப்பத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன். அதையும் மீறி இல்லாததாக நான் நினைக்கும் கடவுளிடம் எனக்கு இதை தாரும் பதிலுக்கு நான் அதை தருகிறேனென்ற நேர்த்தியை எனது பாசையில் சொல்வதென்றால் கடவுளுக்கான லஞ்சப் பட்டியலை தயாரிக்கும் சிறுபிள்ளைத் தனம் இப்போது என்னிடம் இல்லை.
ஒவ்வொரு வெள்ளியும் வைரவர் கோவிலுக்கு போன, நால்லூர் கந்த சுவாமி கோவில் 25 நாள் திருவிழாக்காலத்திலும் விரதமிருந்து அடியழிக்கிற, கந்தசட்டிக்கு உபாவாசமிருந்து சூரன் போர் பார்த்து அடுத்த நாள் பாறனை முடிக்கிற , திருவெம்பாவைக்கு கோலம் போட்டு விரதமிருக்கிற சாந்தாவா இதை எழுதுறாள் என்று இந்த கணம் உன் மனதில் பழைய நினைவுகள் வலம் வரலாம் என்பது எனக்கு தெரியும்.. ஆனாலும் அதே சாந்தா தான் உண்மையில் இதையும் எழுதுகிறேன்.
"கடவுள்" என்று ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி அல்லது சந்தேகம் சிலருக்கு குறிப்பிடத் தக்க சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து வலுவானதாகிறது. அப்போது தான் பகுத்தறிவு பல ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கும். அதே சந்தர்ப்ப சூழ்நிலைகள் தாக்கினாலும் பெரும்பாலானோருக்கு அந்தச் சந்தேகம் வருவதில்லை, காரணம் அவர்கள் முன்னாள் வினைப்பயனின் காரணமாகவே இந்நாள் வாழ்கையும் சம்பவங்களுமென்று நம்புகிறவர்கள் அவர்கள். அதிர்ஷ்டவசமா அல்லது துரதிஷ்டவசமா என்று தெரியவில்லை..எனக்கு அந்த சந்தேகம் தான் வலுத்ததே தவிர முற்பிறப்பு பற்றியெல்லாம் யோசிக்க வரவில்லை.
அண்டைக்கு ஒரு நாள் சென்னையில் செண்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு பிச்சைக்காரர் குப்பைத் தொட்டியைக் கிளறி எடுத்து சாப்பிட்டதை பார்த்த போது தான் பிச்சைக்காரர்களின் நிலமையின் தாக்கம் மனசை தாக்கினது. ஈழத்தில் வீடு வீடா வந்து சாப்பாடு கேட்கிறவையாயும், சாப்பாட்டுக்காக எங்கட வீட்டில் விறகு வெட்டி தந்திட்டு சாப்பாடு வாங்கிட்டு போறவையாயும் அல்லது பஸ் தரிப்பிலோ ரெயினுக்குள்ளேயோ பாட்டுப் பாடி பால் டின்னைக் குலுக்கி காசு கேட்கிறவையாயோ தான் பிச்சைக்காரர்களாய் பார்த்த எனக்கு இது தான் என்ன கடவுள் என்று யோசிக்க வைச்ச முதல் வெறுப்பு என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் குறிப்பா சென்னை எனக்கு வாழ்கையின் முக்கிய பாடங்களை படிப்பிச்சிருக்கெண்டு தான் சொல்ல வேண்டும். ஈழத்தில் வளந்ததும், படித்ததும், பார்த்த உலகமும் வேறு...இங்கே தமிழ் நாட்டில் நான் பார்த்து படித்த உலகம் வேறு.. கடவுள் நம்பிக்கைக்கும், பக்திக்கும் கோவிலுக்கும் வரலாறு வைத்திருந்த ஒரு திருநாட்டில் தான் நான் கடவுளைப் பற்றிய மாற்றுச் சிந்தனைகளை படிக்கத் தொடங்கிய விநோதம் நடந்தது.
ஈழத்தின் நிகழ்வுகளும் சரி , என் வாழ்கையின் பல முக்கியமான நிகழ்வுகளும் சரி மனதை ரணமாக்கிய அத்தனை வாழ்கையின் மாற்றங்களும் ஒவ்வொரு அனுபவமாக சென்னையில் வாழத் தொடங்கிய பின் தான் எனக்கு நிகழ்ந்தது. ஈழத்தில் அப்பா அம்மா என்ற இருவரின் பொறுப்பில் வீட்டின் சமர்த்து பிள்ளையாக பள்ளி போவதும், விளையாடுவதுமாயிருந்த இளவரசி வாழ்கை சென்னை மண்ணில் மாறிப் போயிற்று. வீட்டின் பல விசயங்களை நான் பொறுப்பெடுக்க வேண்டிய சூழலும், எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமுமாய் அப்போது தான் நான் என்னை வளர்க்கத் தொடங்க வேண்டிய கட்டாயத்திலிருந்ததால் ஒவ்வொரு நிகழ்வுகளும் எனக்கு ஒரு படிப்பினையாகப் போயிட்டுது. பல படிப்பினைகள் துயரமான முடிவுகளைக் காட்டிச் சென்றது.
"கடவுள்" என்ற அந்த வார்த்தை மீதான விருப்பம் எங்கட மக்கள் இலங்கையில் கொத்து கொத்தாக இலங்கை இராணுவத்திடம் சிக்கி சின்னா பின்ன பட்ட போதும், அமைதி காக்கிறேன் பேர்வழி என்று I.P.K.F வந்து பின் அவர்களும் அதே கைங்கரியத்தை செய்யத் தொடங்கிய போதும் கழறத் தொடங்கி இப்ப நம்பிக்கையின்மை கலந்த கோபமாகவும் வெறுப்பாகவும் போன பின் சாமி அறைப் பக்கமே போகப் பிடிக்கவில்லை. கடவுள் என்பவர் சோதிக்கலாம்; ஆனால் சாகடிக்கலாமோ?? அதுவும் கொடூரமாக சித்ரவதை செய்து , மானபங்கப்படுத்தி ஒரு உயிரை இன்னொரு மானுடம் கொல்ல எப்படி அனுமதிக்கலாம்?? அதை தடுக்காமல் எப்படி இருக்கலாம்?? தடுக்க முடியாது என்றால் கடவுள் என்ற தகுதி எதற்கு?? எங்களுக்கு நேரடியாக இந்தக் கொடூரங்கள் நடப்பதால் இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டியதாகிவிட்டது. எதுவும் நடக்காமலிருந்திருந்தால் வழமை போல் கோவில் போய் விரதமிருந்து , உபவாசமிருந்து கடவுளை கும்பிட்டுக் கொண்டிருந்திருப்பேனோ என்னமோ??
எப்படி ஒரு எதிரியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் சந்திக்கும் சந்தர்ப்பங்களை தவிர்க்க விரும்புகிறேனோ அதே அளவு கோவிலுக்கு போவதையும் தவிர்க்க பாடுபடுகிறேன். அதுவும் லீலா மாமியும் அவவோடு சேர்ந்து அந்த 1988ம் ஆண்டின் தீபாவளி நாளண்டு எங்கள் அயலில் I.P.K.F ஆல் கொல்லப்பட்ட 32 பேரின் மரணச் செய்தியின் பின் கடவுளாவது ஒன்றாவதென்று வெறுப்பு மூண்டுவிட்டது. அந்த வெறுப்பு தனிப்பட்ட ரீதியில் எனக்குள் எரிமலையாக வளர்ந்திருக்கே தவிர குறைய வில்லை. லீலா மாமி , நடேஸ், அப்பா என்று எதிர்பாராத இழப்புகள், தாங்கவியலாத மரணங்கள் தந்த வலி வாழ்கையில் இன்னொருவிதமான பாடத்தை படிப்பிக்க தொடங்கியிருக்கிறது எனக்கு.
மரணம் என்பது தெரிந்த ஒரு முடிவு தான்! அதை எதிர் கொண்டு தானாக வேண்டும். இல்லையென்று சொல்ல வில்லை. ஆனால் ஒருவரின் மரணம் உயிரோடு இருப்பவர்களை வாழ் நாள் முழுவதும் நடைபிணங்களாக திரியவைக்குமளவுக்கு இருக்குமேயானால் , உலகின் அத்தனை ஜீவராசிகளுக்கும் சம ஆளவில் கருணை பாலிக்கும் , தாயுமானவனானவன் தந்தையுமானவன் என்ற கடவுளின் தராசு தட்டில் தளும்பல் அல்லவா தெரிகிறது. எந்த தாய்க்கு அல்லது தாய்க்கு தன் பிள்ளைகள் துடிக்க துடிக்க சித்திரவதை செய்து தான் தங்கள் மரணங்களை வாங்க வேண்டுமென்று சொல்ல மனம் வரும்? எந்த கருணையுள்ள ஒருவர் தன் மகள் பலரின் கையில் கசக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட வேண்டுமென்று விதி எழுத மனம் வரும்?? அப்படி தான் விதி உனக்கு இது தான் நடக்குமென்று அவன் எழுதினது தான் வாழ்கை என்றால் , ஜீவராசிகளின் விருப்பு வெறுப்புகளைப்பற்றிய அக்கறையில்லாமல் எவனோ ஒருவனால் எழுதப்பட்ட விதி தான் உன் வாழ்கை என்றால் அவனை கடவுள் என்று நாம் ஏன் கொண்டாட வேண்டும்??? அதனால் என்ன பயன்?? அவனை நான் ஏன் எனக்கு எந்த வகையிலும் தீங்கு நினைக்காத என் அப்பா அம்மாவுக்கு ஒப்பானவனாகப் பார்க்க வேண்டும்..??
கடவுள் இருக்குதா இல்லையா என்று நான் ஆராயப் போவதில்லை; இருந்தால் இருக்கட்டும்; அப்படி இல்லையென்றாலும் நான் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை; என்னுடைய வாழ்கையை நான் நடத்தும் வரை எனக்கு கடவுள் தேவையில்லை;
கடவுள் இருக்கிறான், கைவிட மாட்டான் என்று நம்பிய எந்தவொரு தருணத்திலும் அந்த நம்பிக்கைகள் காப்பாற்றப்படாமல் பொய்த்து போன பின் , இனி எந்த தருணத்திலும் எது நடப்பினும் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை எனக்குள் உருவாக்கிக் கொள்ள பழகிவிட வேண்டியது தான்.
ஒருவரின் மரணமா..சரி எதிர் கொள்வோம்?? மிஞ்சி மிஞ்சி போனால் அந்த மரணத்திற்காக என்னால் என்ன செய்ய முடியும்..?? கவலைப்பட முடியும்?? கண்ணீர் விட முடியும்?? காலப் போக்கில் கண்ணீர் நின்று விடும்; மனதினடியில் அந்த வலியும் துயரமும் முடங்கிப் போயிருக்கும். அவ்வப்போது ஏதோ ஒரு காரணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து திரும்ப திரும்ப வலிக்க வைத்துவிட்டு பழையபடி போய் முடங்கிக் கொள்ளும். அவ்வளவு தானே?? சரி விடு நான் அதை பழகிக் கொள்கிறேனே...!
எனக்கு என்ன வேண்டுமென்றோ , வேண்டாமென்றோ தீர்மானிக்க வேண்டியவளாய் நானே இருக்க வேண்டுமென்றால் கடவுள் என்ற மாயையை நோக்கி என் கைகள் பிச்சை கேட்கக் கூடாது. அதனால் இப்போதெல்லாம் நானெந்த நேர்த்திக்கடனும் வைப்பதில்லை. :):)
ஆனால் உனக்கு தான் தெரியுமே என்ர அம்மாவைப் பற்றி?? உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் , என்ன கஷ்டம் வந்தாலும் உடன யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பருக்கு நேர்த்தி வைச்சிடுவா..!:):) முனியப்பரே இப்ப ஆமிக்காரரிடம் நேர்த்தி வைக்கிற விதியில சீரழிஞ்சு போய்க்கிடக்கிறார் என்று அம்மாவுக்கு மறந்து போச்சுப் போல... :):)
இப்பவும் எனக்காகவும் என்ர வயித்தில இருக்கிற பிள்ளைக்காகவும் , டியூமருக்காகவும் கூட காசு நேர்ந்து முடிஞ்சு சாமி அறைக்குள் வைத்திருக்கிறா. உந்த மாதிரி காசு நேர்ந்து முடிஞ்சு வைச்சிருக்கிற சின்ன சின்ன வெள்ளைப் பொட்டணிகள் ஒரு அம்பாரம் இந்த சாமியறைக்குள் ஒரு பெட்டி நிறையக் கிடக்கு தெரியுமே?? அந்த அம்பாரங்கள் அத்தனையும் அம்மா முனியப்பருக்கு ஆசை காட்டி வைச்சிருக்கும் லஞ்சப் பணம் தான்.
முனியப்பர் அம்மாவிடம் வாங்கிய லஞ்சங்களில் பெரும்பாலான நேர்த்திகளைக் கவனிக்காமல் , கிடப்பில் தூக்கி எறிஞ்சிட்டார். அம்மா தன்ர நேர்த்தியில் பலனளிக்காதவைக்கு குடுத்த லஞ்சப்பணத்தை திரும்ப எடுப்பதும் இல்லை ..அவ்வளவு பயம் முனியப்பரிடம் அம்மாவுக்கு..:):)
சலிப்படைந்த தருணங்களின் கூட்டுத் தொகையாக வாழ்கை போகத் தொடங்கிவிட்டது. இனி வயிற்றிலிருக்கும் குழந்தையும் அதன் வளர்ச்சியும், கவனிப்புமென்று என்னுடைய இயல்பிலிருந்து இன்னொரு தடவை விலகி நடக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. பத்தாக் குறைக்கு கொசுறாக உடலுக்குள் இரண்டொரு கட்டிகளையும் சேர்த்து பராமரிப்புப் பார்க்க வேண்டும்,,,
"நீ போன பிறப்பில என்ன கருமம் செய்தியோ...இப்ப இந்த மாதிரி அனுபவிக்கிறாய்..பிறந்த நாள் தொட்டு நோயும் நொடியுமா...உனக்கெண்டு இப்பிடி விதி எழுதியிருக்கு பார்" இது பெரியம்மாவோட நேற்று போன்ல கதைக்கேக்கில பெரியம்மாவின் அங்கலாய்ப்பு.
எத்தனை இலகுவாக போன பிறப்பின் என்னுடைய குணதிசயம், நடத்தை எல்லாம் இந்தப் பிறப்பில் எனக்கு வரும் இடர்களையும், வருத்தங்களையும், நோய் நொடிகளையும் வைத்து கணிக்கக் கூடியதாக இருக்கிறது என்று ஒரு நிமிசம் யோசித்துப் பார்.....சிரிப்பு சிரிப்பா வரேலையா உனக்கு?? :):) இந்தப் பிறப்பை விட போன பிறப்பில் நான் அதிக பாவம் செய்தவளாக இருந்திருக்கிறேனா அல்லது அடுத்த பிறப்பில் எனக்கு இதை விட கொடூரமான நோய் எல்லாம் வருமோ?? :):) `
என்ன இவள் இப்பிடியெல்லாம் யோசிச்சிருக்கிறாளே என்று நினைக்கிறாயா?? இவளா ஐந்தாம் வகுப்பு படிக்கேக்கிலயே சாமி மேல பாட்டெல்லாம் எழுதினாள் என்று சந்தேகப்படுகிறியாக்கும்...எனக்கும் சில நேரம் அப்படித் தான் இருக்கும்.. என்னுடைய பழைய நாட்களுக்கான அடையாளங்கள் பல என்னைவிட்டு கழண்டு போய்க் கொண்டிருக்கின்றன என்பது எனக்கு தெரிகிறது. அதை ஒன்றும் செய்ய முடியாது. எப்பிடி அஞ்சு வயசில போட்ட சட்டை வடிவாக இருக்கிறது எண்டுறதுக்காக இருபது வயசுலயும் அதை போட வேணுமெண்டு நினைக்கிறது நகைப்புக்குரியதோ அது மாதிரி தான் இந்த மாதிரி தெளிவுகள் அல்லது மன மாற்றங்கள்...அவை சரியானவையாக இருந்தாலும் சரி பிழையானவையாக இருந்தாலும் சரி ....!

மீண்டும் இன்னொரு கடிதத்தில் உன்னை சந்திக்கும் வரை ......
“Good friends are like stars.... You don't always see them, but you know they are always there”
இங்ஙனம்
அன்புடன்
சாந்தா.
--